
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என தீபா மற்றும் தீபக்கை உயர்நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா என சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது ஏற்புடையதல்ல என்றும், தாங்கள்தான் ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளுக்கும் சட்டப்பூர்வ வாரிசுதாரர் எனவும் வாதிட்டனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான மற்ற சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியது. அவர்களை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்து, அவர்களுக்கு அவர்களின் சொந்தச் செலவில், அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

ஏற்கனவே தீபா, தீபக் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைப் போல சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவர்களது அத்தையான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளையாக தோற்றுவிக்க வேண்டும். மேலும், அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீபக்குக்கும் அவரது அக்கா தீபாவுக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா எனக் கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரினார்.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞரும் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 24- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.