Skip to main content

புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாகிவிட்டதே! -உயர்நீதிமன்றம் ஆதங்கம்!

Published on 01/10/2020 | Edited on 02/10/2020

 

highcourt

 

கரோனா ஊரடங்கின்போது, மஹாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்களில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து,  வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி,  திருப்பூர் மாவட்டத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியை மேற்கோள் காட்டி முறையீடு செய்தார்.

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக் கட்டுப்பாடும் உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. புனித பூமியாகக் கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது. இது துரதிஷ்டவசமானது. குறிப்பாக, புலம்பெயர்ந்த பெண் தொழிலார்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை எனத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர்,  திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி., விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்