பெரம்பலூர் மாவட்டம் கால்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த வருகைதந்த அதிகாரிகளிடம், தற்போதைய தலைவர் கலைச்செல்வன் மற்றும் கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் 100 நாள் வேலை தொகுப்பு, வீடு கட்டுதல், தனிநபர் கழிப்பறை கட்டுதல் ஆகிய திட்டங்களில் பல்வேறு மோசடிகளை செய்து அரசு பணத்தை முறைகேடாக எடுத்துள்ளனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு அதிகாரிகள் மெத்தனமாக பதில் அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கிராமசபை கூட்டம் நடத்த வந்திருந்த பெரம்பலூர் ஒன்றிய ஆணையர்கள் முரளிதரன் மோகன் ஆகியோர்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர். பலமணிநேரம் அவர்களை ஊருக்குள்ளேயே சிறைவைத்து முறைகேடுகளுக்கு நீங்களும் உடந்தையா என வாக்குவாதம் செய்தனர். இப்படி பலமணிநேரம் அதிகாரிகளை கவுல்பாளையம் மக்கள் சிறைவைத்த தகவல் பெரம்பலூர் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கல்பாளையம் சென்று அதிகாரிகளை சிறைவைத்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தவறு செய்த ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகே அதிகாரிகளை கிராம மக்கள் விடுவித்துள்ளனர். காலை பதினோரு மணி முதல் மாலை 4மணி வரை அதிகாரிகளை சிறை வைத்திருந்த செய்தி மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு உடந்தையாக உள்ளவர்களையும் ஊழல் செய்பவர்களையும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் அரசு திட்டங்கள் கிராம ஊராட்சிகள் மூலம் செம்மையாக நிறைவேற்ற முடியும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.