Skip to main content

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர் ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவதால் மக்களுக்கு பலனில்லை-ஸ்டாலின்

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

 

stalin

 

சென்னையில் நேற்று உயர்கல்வி மேம்பாடு குறித்து நடந்த கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் பணி நியமனத்தில் பல கோடிகள் புரண்டதாக தெரிவித்தார். துணை வேந்தர் பணி நியமனம் தகுதி அடிப்படையிலேயே நடக்க வேண்டும் ஆனால் இப்படி பல கோடிகள் வாங்கிக்கொண்டு துணை வேந்தர்களை நியமித்தது கண்டு வருத்தமடைந்தேன். அந்த நிலையை மாற்ற வேண்டும். இதுவரை தகுதி அடிப்படையில் 9 துணை வேந்தர்களை தான் நியமித்துள்ளேன் எனவும் கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,   

 

“தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அதிமுக ஆட்சியில் துணை வேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழலை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் “உயர் கல்வி கருத்தரங்கம்” ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் அவர்களை சந்தித்து விட்டுத் திரும்பிய மறுதினமே இப்படியொரு ஊழல் புகாரை மாநிலத்தின் ஆளுநர் அவர்களே சுமத்தியிருக்கிறார் என்றால் - முதல்வரிடமே இந்த ஊழல் பற்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டினாரா என்ற கேள்வியும் எழுகிறது.

 

அதேநேரத்தில் துணை வேந்தர் நியமனம், டெண்டர் ஊழல் உள்ளிட்ட அதிமுக அரசின் மீது திராவிட முன்னேற்றக் கழகம் சுமத்தி வரும் ஊழல்கள் அனைத்தும் உண்மை என்பது இப்போது அரசியல் சட்ட பதவி வகிக்கும் ஆளுநர் அவர்களின் குற்றச்சாட்டிலிருந்து நிரூபணமாகியிருக்கிறது.

 

ஆனால் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் - அல்லது ஊழல்கள் குறித்து உரிய “மாதாந்திர அறிக்கை” அனுப்ப வேண்டிய அதிகாரத்தையும் பெற்றிருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்படி பொதுமேடைகளில் பேசுவதற்குப் பதில், கடந்த ஒரு வருட காலத்தில் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் இந்த ஊழல் அதிமுக அரசு வீட்டுக்குப் போயிருக்கும்- தமிழக மக்களுக்கும் நிம்மதி கிடைத்திருக்கும். அ.தி.மு.க அரசு ஊழலின் மொத்த உருவமாக இருக்கிறது. ஆட்சியில் நடைபெறும் அனைத்து அப்பாயின்மென்டுகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் தொடர்பாகவும் கூட தி.மு.க.வே மனு அளித்திருக்கிறது.

 

இவை ஒருபுறமிருக்க, “குட்கா” ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் - தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டே நடந்து விட்டது. அமைச்சர்கள் திரு எஸ்.பி. வேலுமணி, திரு.தங்கமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சராக இருக்கும் திரு ஓ.பன்னீர்செல்வம் மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரித்து வருகிறது.

 

எல்லாவற்றிற்கும் மேலாக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி திரு.பழனிச்சாமி மீது 3,120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஊழல் தொடர்பாக மாண்புமிகு ஆளுநரிடம் நானே சென்று நேரடியாக அளித்துள்ளேன். ஆனால் அ.தி.மு.க அரசின் மீதான இந்த ஊழல் புகார்கள் மீது மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? ஊழலின் சாக்கடையில் இந்த அரசு நீந்தட்டும் என்று அனுமதித்து விட்டு அமைதி காப்பது ஏன்? அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அதிமுக ஆட்சி பதவியில் தொடருவதற்கும் அனுமதித்து - இப்போது பொதுமேடைகளில் ஊழல் பற்றி பேசுவது ஏன்? சி.பி.ஐ ரெய்டுகளும், வருமான வரித்துறை ரெய்டுகளும் நடைபெற்றது அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தும், பிரதான எதிர்கட்சியின் சார்பில் ஆளுநர் அவர்களுக்கே புகார் அளித்தும் அதிமுக அரசின் ஊழலை தடுக்க மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இதுவரை முடியாமல் போனது ஏன்? - அதிமுக என்ற ஊழல் அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் அவர்களுக்கு தடை போடும் சக்தி எது? - இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அணி வகுத்து நிற்கின்றன.

 

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர் அவர்கள் இப்படி ஊழல் பற்றி வெளிமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது. அதற்கு பதிலாக, ஊழல் அ.தி.மு.க அரசின் மீதும், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் மீதும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் தமிழக ஆளுநர் பதவியில் ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்கள், ஊழல் புகார்களின் மீது நடவடிக்கையும் எடுக்கத் தவறி அ.தி.மு.க அரசின் ஊழல்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் “துணை வேந்தர்கள் நியமன ஊழல்” பற்றி மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது.

 

ஆகவே அ.தி.மு.க அரசின் ஊழல்களை தடுக்க வேண்டும் என்பது மாண்புமிகு ஆளுநர் அவர்களின் உண்மையான அக்கறையாக இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கிறது என்ற ஆதாரபூர்வமாக பேசியிருக்கும் நிலையில், அதற்கு காரணமான உயர் கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது தவிர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் அனைத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திக் கொண்டு ஊழலில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் திரு.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.