Skip to main content

அரசுப் பேருந்து மீது மோதிய சரக்கு லாரி!

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

government bus and lorry incident police investigation

மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மீது சரக்கு லாரி மோதியது தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இன்று (27/12/2021) காலை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 பயணிகளுடன் சத்தியமங்கலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆலாங்கொம்பு என்ற இடத்தில் சரக்கு லாரி திரும்பியபோது, எதிரே வந்த பேருந்து மீது நேரடியாக மோதியது. இதில் அரசுப் பேருந்து நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கடை ஒன்றின் மீது கவிழ்ந்து விழுந்தது. 

 

உடனடியாக அருகில் இருந்த மக்கள் ஓடிச் சென்று காயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 8 பேரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கிளைச்சாலையில் இருந்து பிரதான சாலைக்கு சரக்கு லாரி திரும்பியபோது, அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். 

 

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஐ.பி.எல். ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி’ - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய தகவல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Happy news for IPL fans MTC Important Information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நாளை (26.03.2024) நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை  காணவரும் பார்வையாளர்கள், தங்களது  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், மாநகர போக்குவரத்துக் கழகம் போட்டி முடிந்த பின்பும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட உள்ளது.

Happy news for IPL fans MTC Important Information

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் (Chennai Super Kings Cricket Limited) நிறுவனத்திடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 22.03.2024 அன்று நடைபெற்ற போட்டியின் போது வழங்கிய ஒத்துழைப்பு போல் இந்த போட்டிக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.