Skip to main content

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படுஜோராக நடைபெற்ற ஆட்டுச் சந்தை வியாபாரம்!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Goat market trade was good on the occasion of Bakrid festival
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான மக்கள், வியாபாரிகள் சந்தைக்கு வருவார்கள். அன்றைய தினம் மட்டும் பல லட்சங்கள் வியாபாரம் நடக்கும்.

அதேபோல் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நெல்லுார் கிடா ஆடுகள் எனப் பல்வேறு ரகத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஆட்டு சந்தையில் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது.  சிறிய ரக ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும்,  பெரிய ரக ஆடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விலை போனது.

உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இன்னும் 10 தினங்களில் பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். இதனால் இந்த வாரம் கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் படுஜோராக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்