Skip to main content

“கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு”-  ஜி.கே.வாசன் 

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
GK Vasan  said that decision will be taken about alliance in Lok Sabha elections

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம்; ஆனால் அந்த கட்சிகளுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.,தற்காப்பு கலையான கராத்தே கலை தீவிரமாக மாணவர்கள் மத்தியில் பரவி வருவது வரவேற்கத்தக்கது.

கராத்தே பயிற்சி ஊக்கத்தொகையை தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டுமே வழங்கி வருகிறது. இதனை ஆண்டுக்கு 10 மாதமாக உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதன் மூலம் மாணவிகள் தற்காப்பு கலையில் சிறந்து விளக்க முடியும். தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

ஈரோடு -பவானி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் சர்வதேச விளையாட்டு பயிற்சியும் ஒருங்கிணைந்த மைதானம் அமைக்க வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்து அரசு வாரத்தில் மூன்று நாட்கள் விளையாட்டு வகுப்புகள் வைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தம் குறைந்துது செல்போனில் மூழ்குவதில் மாற்றம் ஏற்படும். கராத்தே, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் அரசு, தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

விமானங்களில் பயணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விமானங்களில் குடித்து விட்டு பயணம் செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்ம விபூசண் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். விஜயகாந்த்துக்கு இந்த விருது கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. தொலைக்காட்சி செய்தியாளர்களை மிரட்டுவது, தாக்குவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தமிழக அரசு மீண்டும் இதுபோன்ற செயல் நிகழாமல் தடுக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது, இதனை பயணிகள் வசதிக்காக முறைப்படுத்த வேண்டும்.

மேகதாது அணைக்கு ஒருபோதும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது, இதற்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் த.மா.கா அறிவிக்கும். தற்போது மக்கள் சந்திப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இளைஞரணி, மாணவரணியினரை சந்தித்து வருகிறோம். தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி அனைத்து அணிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இறுதியாக பிப்ரவரி மாதம் இறுதியில் செயற்குழு கூடி மக்கள் எண்ணைத்தைப் பிரதிபலிக்கும் வகையில் முடிவு அறிவிக்க வேண்டும்.

திமுக கூட்டணியை வெல்லும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும். கூட்டணியைப் பொறுத்தவரை அவரவர் சார்ந்த குழுக்கள் உள்ளதால்., அதற்கேற்ப செயல்படுவார்கள். முதல் நாளில் இருந்து இந்திய கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக, வடிவமாக உள்ளது. அதில் உள்ள தலைவர்கள் உதட்டு அளவில் தான் பேசி வருகிறார்கள். ஆனால் உள்ளத்தில் இருந்து பேசவில்லை. அவர்கள் நோக்கம் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தான் உள்ளது. ஆனால் அதில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இல்லை என்று மாநில கட்சிகள் சொல்கிறார்கள். பீகார் மாநிலம் முதல்வர் நிதிஷ்குமார் அனுபவமிக்க மூத்த தலைவர். இந்த நிலையில் மாநில மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் நிதிஷ்குமார் முடிவை எடுத்துள்ளார்.

இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்பது தான் எனது கருத்து. பொதுவாக இந்திய அளவில் பாஜக பிரகாசமாக செயல்பட்டு வருகிறது. திமுக இளைஞர் அணி மாநாடு பணபலம், விளம்பரத்திற்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவு செய்வது என்பது மத்தியில் உள்ள தலைவராக தான் இருக்கும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ள அரசு திமுக தான். மக்கள் அவர்களுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். நிச்சயம் இது பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்”  என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.