Skip to main content

திருவிழாவிற்கு வந்த சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு-பெண்ணாடத்தில் சோகம்!

Published on 03/07/2022 | Edited on 03/07/2022

 

cuddalore district

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.பூவனூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (வயது 37) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி (13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) என ஐந்து பெண் குழந்தைகளும், 4 வயதில் சிவபெருமாள் என ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பெருமாளின் மனைவி பிறந்த ஊரான திருமலை அகரம் கிராமத்தில் தீமிதி திருவிழா நடந்ததால் பெருமாளின் மனைவி கன்னியாகுமரி மற்றும் அவரது மூத்த மகள் முத்துலட்சுமி, இரண்டாவது மகள் சிவசக்தி ஆகியோருடன் தாய் வீட்டிற்கு சென்று தீமிதி திருவிழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். நேற்று முன்தினம் அக்கிராமத்தில் மஞ்சள் நீராட்டு விளையாட்டு என்பதால் குழந்தைகள் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

 

தொடர்ந்து இரவு முத்துலட்சுமி மற்றும் சிவசக்தி இருவரும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த தாய் கன்னியாகுமரி மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடிப் பார்த்தனர். இரண்டு குழந்தைகளும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருமலை அகரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில் அந்தக் குழந்தைகள் பெருமாள்-கன்னியாகுமரி தம்பதியரின் குழந்தைகள் என்பதும், பெ.பூவனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து பெண்ணாடம் போலீசார் முத்துலட்சுமி, சிவரஞ்சனி ஆகிய இரண்டு குழந்தைகளின் உடல்களை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஏரியில் மூழ்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்