
மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கதற கதற கடத்தி சென்ற சம்பவம் பதற வைத்துள்ளது. கடத்தி சென்ற கும்பலை மயிலாடுதுறை போலீசார் விக்கிரவாண்டி அருகே கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதேபகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். ஆனால் விக்னேஸ்வரனோ அந்த பெண்ணை விடாமல் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாக நண்பர்களிடம் பகிர்ந்ததோடு, அந்த இளம் பெண் வீட்டிற்கே சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளான்.

இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை போலீசில் 2 முறை புகார் அளித்துள்ளனர். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர். ஆனாலும் விக்னேஸ்வரன் அந்த பெண்ணை விடுவதாக எண்ணமில்லை என சக நண்பர்களிடம் கூறி கடந்த ஜூலை 12ம் தேதி அப்பெண்ணை கடத்த முயன்றுள்ளான். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் மீண்டும் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது, கொலை மிரட்டல் விடுத்தது என இரு பிரிவின் கீழ் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15 க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக கதறக் கதற தூக்கிச் சென்றுள்ளனர். தகவலறிந்த மயிலாடுதுறை டி,எஸ்,பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டிலிருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடத் துவங்கினர். கடத்தல் சம்பவத்தை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாரை உஷார் படுத்தியதோடு சிசிடிவி கேமரா உதவியுடன் சோதனை செய்து அருகில் உள்ள மாவட்ட காவல்துறையையும் உஷார் படுத்தினர்.
இந்த சூழலில் மயிலாடுதுறையில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்ணை விக்கிரவாண்டி டோல்கேட் அருகே மீட்டதோடு, கடத்திச்சென்ற கும்பலையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.