Skip to main content

கஜா புயல் நிவாரணத்தை வங்கி கடனுக்கு வரவு வைத்துவிட்டதாக விவசாயி புகார்

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
gaja-storm



புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வந்த நிவாரணத் தொகை மற்றும் 100 நாள் வேலை க்கு வந்த சம்பளத்தை வங்கி நிர்வாகம் கல்விக்கடனுக்கு பிடித்தம் செய்து கொண்டதாக விவசாயி புகார் கூறியுள்ளார். 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகள், மரங்கள் மற்றும் விவசாயம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அவர்களுக்கு பாதிப்புகளுக்காண நிவாரணத்தை தமிழக அரசு வங்கி கணக்கு மூலம் வழங்கி வருகிறது. பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வரும் நிவாரணத் தொகையை பழைய கடன்களுக்கு வரவு வைத்துக் கொள்வதாக எழுந்த புகாரையடுத்து புயல் நிவாரணத்தை வங்கிகள் கடனுக்கு வரவு வைக்க கூடாது என்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா.  கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 2009-ல் ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ரம்யா, பிஎஸ்சி நர்சிங் படித்தார். 

 

  இந்நிலையில்  புயலினால் விவசாயி ராஜேந்திரனின் தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டன. இதற்காக தமிழக அரசு ரூ.34 ஆயிரம் நிவாரணத் தொகையை இவரது வங்கிக்  கணக்கில் அரசு செலுத்தியது. இதை தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியின் வாயிலாக அறிந்து தொகையை பெறுவதற்காக வங்கிக்கு சென்றபோது அந்த தொகையை வங்கி நிர்வாகம் ஏற்கனவே மகள் படிப்பிற்காக வாங்கி இருந்த கல்விக் கடனுக்கு வரவு வைத்துக்கொண்டது தெரியவந்தது. மேலும், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கிடைக்கும் சம்பளத் தொகையையும் வங்கி நிர்வாகம் வரவு வைத்துக் கொண்டதும் தெரியவந்தது. 

 

  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ள நிலையில் விவசாயியின் நிவாரணத் தொகையை வங்கி நிர்வாகமே வரவு வைத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து நிவாரணத் தொகையை விடுவித்துத் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் ராஜேந்திரன் நேற்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

 

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறும் போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவசாயிகள் வீடுகள், மரங்கள், பயிர்களை பறிகொடுத்துவிட்டு வாழ்வாதாதம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்டச் சொல்லி விரட்டக் கூடாது என்றும் வங்கி கணக்கில் வரும் நிவாரணத் தொகையை கடனுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தியதுடன் மாவட்ட நிர்வாகத்திடம் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுத்திருக்கிறோம். அதே கோரிக்கையை வலியுறுத்தி மகளிர் சுயஉதவிக்குழு பெண்களும் போராட்டங்களை நடத்தி மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் ஒரு வருடத்திற்கு கடன் மற்றும் வட்டி கட்ட கால அவகாசம் வழங்கியதுடன் நிவாரணத் தொகையை கடனுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்றும் அறிவித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி வங்கிகள் செயல்படுகிறது. கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் மாவட்டம் முழுவதும் விவசாயிகளின் நிவாரணத் தொகையை கடனுக்கு வரவு வைத்துக் கொண்டு விவசாயிகளை பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் செய்கிறது. அதனால் வங்கிகளை கண்டித்து மக்களை திரட்டி விரைவில் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.