Skip to main content

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Former Minister MR. Vijayabaskar sentenced to court custody

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக  இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர்.  மேலும் இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வந்தனர். 

Former Minister MR. Vijayabaskar sentenced to court custody

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். அதோடு சார்பதிவாளரை  மிரட்டிய வழக்கில் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்