Skip to main content

“ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக் கூடாது” - உணவு பாதுகாப்பு அலுவலர்

Published on 16/10/2024 | Edited on 16/10/2024
Food Safety Officer said Do not reuse oil that has been used once

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தங்க விக்னேஷ் பேசியதாவது: தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளர் அனைவரும் உணவு பாதுகாப்பு துறை உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயமாக பார்வைக்கு வைத்திருக்க வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்ட பிறகே விற்பனை செய்தல் வேண்டும். உணவுப் பொருட்கள் கையாளுபவர்கள் கையுறை, முக கவசம், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக்கூடாது. உணவு கையாள்பவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மறு விநியோகம் செய்தல் கூடாது. மாறாக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை அங்கீகரிக்கப்பட்ட பயோ டீசல் மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்கி அதன் ஆவணங்களை வைத்திருத்தல் வேண்டும். மேலும் பொதுமக்கள் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்