
மேஜிக் மூலம் சுமார் 160 அடி உயரம் பறந்த கோவை இளஞரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த சாதனைக்காக 11ஆண்டுகள் பயிற்சி செய்ததாக மேஜிக் கலைஞர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவரது மகன் விக்னேஷ். கம்பியூட்டர் டெக்னாலஜி துறையில் இளங்கலை பட்டதாரியான 24 வயது நிரம்பிய அவ்வாலிபர் கோவையிலுள்ள வணிக வளாகத்தின் மேலிருந்து சுமார் 62 அடி உயரத்திற்கு பறந்து தான் படைத்த சாதனை வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காண்போருக்கு மிகவும் வியப்பாக தோன்றும் அவரது செயல் 11 ஆண்டு கால உழைப்பு மற்றும் பயிற்சி என்கிறார் விக்னேஷ். இளம் வயது முதலே மேஜிக்கில் தனக்கு ஆர்வம் இருந்ததாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மேஜிக் செய்து வரும் நிலையில் தான் வித்தியாசமாக ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனது 11 வயதில் எவ்வித உபகரணத்தையும் பயன்படுத்தாமல் இரண்டு அடி வரை பறந்ததாக தெரிவித்தார். அதனால் தன்னம்பிக்கை பெற்ற தான் பின்னர் படிப்படியாக அதிக உயரத்தில் பறந்ததாகவும் இறுதியாக 160 அடி உயரம் வரை பறந்து சாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சாதனையை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மூக்கில் விரல் வைத்து இது சாத்தியம் தானா என வியப்புடன் பார்த்து வரும் சூழலில் இந்த சாதனை நிகழ்த்திய பிறகு உடல் ரீதியாக பல உபாதைகள் வந்ததாகவும் ரத்த வெள்ளணுக்கள் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறினார்.
மேஜிக் கலை என்பது வேகத்துடன் கூடிய தந்திரம் எனக்கூறும் விக்னேஷ், தனது வீடியோ பதிவுகளை இணையத்தில் பார்த்து பல நாடுகளிலிருந்து நிகழ்ச்சிகளை வழங்க அழைப்பு வருவதாகவும் ஆனால் தமிழக அரசு தனக்கொரு அங்கீகாரம் தந்தால் மேலும் சாதனை படைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.