மீனவர்கள் வாழ்வில் தொடரும் துயரங்கள்;
23 மீனவர்கள் 5 படகுகள் சிறைபிடிப்பு
உப்புத் தண்ணீரில் மிதக்கும் மீனவர்களின் வாழ்க்கை துயரங்கள் நிறைந்தே உள்ளது. அதிலும் இந்திய மீனவர்களில் தமிழ் மீனவர்களின் வாழ்க்கை தான் கேள்விக் குறியாகவே உள்ளது.
கடலுக்குச் செல்லும் மீனவன் கரை திரும்பும் வரை கரையில் இருக்கும் மீனவ பெண்கள் கூட நிம்மதியாக உண்பதில்லை. நாகை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் கடலுக்குள் சென்றால் அவர்களை இலங்கை கடற்படை அடித்து உதைத்து தாக்கி சிறைப்படுத்திக் கொண்டு செல்வதுடன் மீனவர்களின் படகுகளையும் உடைத்து சேதப்படுத்தி இழுத்துச் செல்கின்றனர்.
இதுவரை 150 படகுகள் வரை இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் மீட்டு கொடுக்கவில்லை. எப்போது கேட்டாலும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற பதிலை மட்டுமே அரசுகள் சொல்கிறது. இதனால் 150 படகு முதலாளிகளும் அதில் வேலை செய்த மீனவர்கள் குடும்பம் வேலை இன்றி தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 படகுகளையும், 23 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்படுத்திச் சென்றுள்ளது. இதனால் மீனவ கிராமங்களில் அழுகுரல்கள் தான் கேட்கிறது. இன் மேல் இந்த மீனவர்கள் சில மாதங்களில் வந்தாலும் அவர்களின் படகுகள் வராது. இன் இந்த குடும்பங்களும் கடனாளியாகத் தான் இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் குமரியில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் முயற்சியில் அரசுகள் மெத்தனம் காட்டுவது போல இலங்கை அட்டுழியத்தை ஆதரித்தே வருகிறது இந்திய அரசு.
மீனவர்களின் வாழ்க்கை எப்பவும் கேள்விக் குறிதானா?
- இரா பகத்சிங்