Skip to main content

நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
Financial Institution Fraud Case Devanathan in police custody for 7 days

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட், நிதி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அண்மையில் அதிரடியாகக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தேவநாதன் யாதவ் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மலர் வேலன்டீனா அமர்வில் கடந்த 14ஆம் தேதி (14.08.2024) ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி (28.08.2024) வரை என 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் காவல் கேட்டுத் தாக்கல் செய்த மனு கடந்த 23ஆம் தேதி (23.08.2024) விசாரணைக்கு வந்தது.

Financial Institution Fraud Case Devanathan in police custody for 7 days

அப்போது, தேவநாதன் தரப்பில் வாதிடுகையில், “இந்த விவகாரத்தில் எந்த மோசடியும் செய்யவில்லை. அரசியல்ரீதியாக பழிவாங்குவதற்காகவே கைது செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் பணத்தைத் திருப்பி தரத் தாயாராக உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதிடுகையில், “வைப்பீடுகள் (Deposits) முதிர்வடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பி தரவில்லை. இந்த நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்யவேண்டும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி. பாபு, “இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். 800க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. தினமும் புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதே சமயம் இது தொடர்பான விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது” என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  “இந்த வழக்கின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறப்பிக்கப்படும்” என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தேவநாதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப் பொருளாதார குற்றப்பிரிவுக்குச் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் செப்டம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்