Skip to main content

கொள்ளையடிக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள்! விவசாயிகள் குற்றச்சாட்டு!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019


 

டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதிலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

டெல்டா மாவட்ட பாசனத்திற்கு குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பான சாகுபடி அளவை எட்ட முடியாத நிலையே கடந்த 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.  2018 சம்பா பருவத்திலும் இதே நிலமையே நீடித்தது, மழைநீரைக்கொண்டும், கிடைத்த ஆற்றுநீரைக்கொண்டும் தாமதமாகவே சாகுபடி செய்திருந்தனர்.
 

 கஜா புயலால் நெற்பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு, எஞ்சிய பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இயல்புக்கு மாறாகவே, மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.  ஜனவரி 9ஆம் தேதி திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாகை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

 இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகையை தாமதமாக வழங்குவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல் கொள்முதல் பணியில் உள்ள ஊழியர்களோ கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதம் எடை போடுவதற்கு முன்பாகவே கேட்கின்றனர், கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்துவருவதாக விவசாயிகள் வேதனை அடைகிறார்கள்.
 

இதுகுறித்து நாகை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் தொகையை செலுத்தாததால் எங்களுக்கு பெரும் பணத்தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையம் ஒவ்வொன்றிலும் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 800 சிப்பம் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. இன்னும் கூடுதலாக நாளொன்றுக்கு ஆயிரம் சிப்பங்களாக கொள்முதல் செய்ய வேண்டும்" என்கிறார்.


 

Rice


அவரே மேலும்," நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள் எடை வைப்பதற்கு முன்பாகவே பணம் வாங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்களும் கையூட்டு பெற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளிக்கின்றனர். மூட்டைக்கு ஒரு ரூபாய் 60 பைசா மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய கூலியாக அரசு கொடுக்கிறது. அது போதாததால் எங்கள் நெல்லில் கையை வைக்கிறார்கள். இது அரசு செய்யும் மிகப்பெரிய தவறு. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல்லுக்கு 1840ம் நெல்லுக்கு 1,800 ரூபாய் வீதமும் கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல் ரகங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று காயவைத்து, தூசு நீக்கி சுத்தப்படுத்தி வழங்குகிறோம். இத்தகைய சூழ்நிலையிலும் கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எவ்வளவு எடை வைக்கப்படுகிறதோ கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நெல்லை கொள்முதல் செய்கிறார்கள். அந்த தொகையை தருவதற்கு தாமதப்படுத்தி முறையிட்டால் நெல்லை எடுக்க காலதாமதம் செய்கின்றனர். மேலும் தரமற்றவையாக உள்ளன எனக் கூறி வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை உடனடியாக வழங்குவதில்லை. கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகள் கூடுதல் சுமையை ஏற்கவேண்டிய நிலையே உள்ளது" என்கிறார்.
 

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "அவர்கள் அனைவரும் ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பதில்லை, வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றனர். அதோடு வங்கி ஆவணங்கள் முறையாக சரிபார்த்த பின்னரே தொகை செலுத்தப்படுகிறது. மற்றபடி தாமதம் ஆகவில்லை. குற்றங்களை கண்டு பிடிக்க தனிப்படைகள் அமைத்து குற்றங்களை தடுத்துவருகிறோம்" என்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.