Skip to main content

உங்களுக்கு எவ்வளவு வேணும்...ஏமாற்றிய இளம் பெண்கள்...அதிர்ச்சி தகவல்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

சென்னையில் ஒரு மோசடி கும்பல் கடன் வழங்குவதாகவும், வங்கியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை ஏமாற்றிய கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. சென்னை சிட்லபாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பீனிக்ஸ் கால் சென்டர் என்ற போலியான நிறுவனம் வாடகைக்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர்கள், அதில் வேலை பார்த்தவர்கள் என 12 பேர் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக ஆசை காட்டியுள்ளனர். பொதுமக்களிடம் பேசும் போது வங்கிக்கு நேரடியாக சென்றால் கிடைக்கும் வட்டி தொகையை விட மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி ஆசை வார்த்தையில் மூளைச் சலவை செய்துள்ளனர். இவர்களுடைய ஆசை வார்த்தையை நம்புவர்களிடம் அவர்களின் ஈமெயில் முகவரிக்கு கடன் வழங்குவதற்கான விண்ணப்பம் அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். 

 

incident



அதில் பொதுமக்களின் ஆதார் கார்டு எண், வங்கிக் கணக்கு விவரம் என அனைத்து விவரங்களையும் கேட்டு உள்ளனர். பின்னர் 2 நாட்கள் வாடிக்கையாளர்களை தங்களை நம்பும் வகையில் அவர்களிடம் தொடர்பில் இருப்பார்கள். பின்பு தொடர்பு கொண்டு வங்கிக் கடன் உங்களுக்கு கிடைத்து விட்டதாகவும் அந்த கடனை பெற வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் இருக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர்.இதன் பின்னர் வங்கிக் கணக்குக்கு பணம் வந்தவுடன், கடன் வரவு வைப்பதற்கு ஒரு ஓடிபி வரும் என்று கேட்கின்றனர். வாடிக்கையாளரும் அந்த ஓடிபி என்னை சொல்ல, உடனே அவர்கள் வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை அந்த போலி கால் சென்டரால் அபகரிக்கப்பட்டு விடுகிறது. 

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சித்தாலப்பாக்கத்தில் உள்ள போலி கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வங்கி வாடிக்கையாளர்களின் பட்டியலை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை கால் சென்டரில் பணி அமர்த்தப்பட்ட 5 இளம் பெண்களை வைத்து வசீகரமான குரலில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களின் வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம்  கார்டு மற்றும் ரகசிய எண்களை பெற்று பல கோடி ரூபாய் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி வந்தது தெரியவந்தது.


இதுபோல் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களிடம் பேசி பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.   இந்த மோசடிக்கு போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன் என்பவர் இளம் பெண்களை நேர்முக தேர்வு நடத்தி அதில் குரல் வளம் மிக்க பெண்களை தேர்வு செய்துள்ளார். இதற்காக இளம் பெண்களுக்கு மாத ஊதியமாக ₹10 ஆயிரம்  வழங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன்(26) மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 5 இளம் பெண்கள் உட்பட 12 பேரை அதிரடியாக மத்திய குற்றப்பிரிவு  போலீசார் கைது செய்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்