Skip to main content

கரோனா காலத்திலும் கடத்தல்காரர்களின் வாழ்க்கை வழக்கமானதாகத்தான் போகிறது...

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Erode

 

ஊரடங்கு காலத்திலும் கொலை, கொள்ளை, சட்ட விரோத பொருட்கள் விற்பனை, கடத்தல் என சட்டத்திற்கு புறம்பான கிரிமினல் வேலைகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கிறது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டு பல வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த பொருட்கள் சாதாரண குக்கிராமத்தில் உள்ள கடைகள் வரை விற்பனை செய்யப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்துதான் இவைகள் தமிழகத்திற்கு இறக்குமதியாகிறது. இத்தொழிலின் மொத்த வியாபாரிகளாக இருப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த மார்வாடிகள்தான்.

ஊரடங்கு என்பதால் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி நூதன வடிவில் நடக்கிறது. அதில் ஒன்றுதான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தையடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறையினர் இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து வந்த பிக்கப் வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த வேனை ஓட்டி வந்த சுரேஷ் என்பவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

அதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்தனர். அப்போது பூண்டு மூட்டைகளுக்கு நடுவே 20 பாக்ஸ் மற்றும் 8 மூட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவைகள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான்மசாலா புகையிலை பொருட்கள் என தெரியவந்தது. 

 

Erode

 

உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்த காவல்துறையினர் வேனை  ஓட்டி வந்த சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து எடுத்து வருவதாகவும், அதனை விற்பனை செய்ய மதுரைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியிருக்கிறார். இதேபோல் மேலும் ஐந்தாறு வண்டிகள் மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் கூறிய அவர் இந்தப் பொருட்கள் யாரிடம் போய் ஒப்படைபீர்கள் என போலீஸ் கேட்டதற்கு யார் என்று தெரியாது வழியில் தொலைபேசி அழைப்பு வரும் சம்பந்தப்பட்ட நபர் வருவார் என்று மட்டும்தான் என்னிடம் கூறினார்கள் என கூறியிருக்கிறார்.

பிடிபட்ட இந்த புகையிலை பொருட்கள் பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்டதாம். போலீசார் வாகன ஓட்டுனர் சுரேஷ் மற்றும் உடன்வந்த தமிழ்வாணன் ஆகிய இருவரையும் கைது செய்து சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். பூண்டு மூட்டைகளுக்கு நடுவே இந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த ஊர்களுக்கு இப்படி போதை பொருள் கடத்தப்பட்டு வருகிறது என்பதையும் தேடி வருகிறார்கள். உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக பரிதவிக்கும் இந்த கரோனா கால கட்டத்திலும் கடத்தல்காரர்கள் வாழ்க்கை வழக்கமானதாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.