Skip to main content

கூட்டு சேர்ந்து ஏமாற்றிய இளம்பெண்; இளைஞர் பரபரப்பு புகார்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

erode veerappan sathiram husband and wife related incident

 

முதல் திருமணத்தை மறைத்து மோசடி செய்ததாக இளம்பெண் மீது ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு இன்று வீரப்பன்சத்திரம் பாவேந்தர் வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) தனது பெற்றோருடன் வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, "நான் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். எனக்கு ஈரோட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவரை நான்கு வருடமாகத் தெரியும். எனக்கு வீட்டில் திருமணத்திற்கு வரன் தேடி வந்தார்கள். இது அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கும் நன்கு தெரியும்.

 

இந்நிலையில் அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தனக்கு பவானியை சேர்ந்த ஒரு பெண் நன்றாக தெரியும் என்றும் தனது அலுவலகத்தில் அவர் வேலை பார்த்து வருகிறார் என்றும் மிகவும் ஒழுக்கமான பெண் என்றும் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என்னிடம் கேட்டார். எனவே அவர் கூறியபடி அந்த பெண்ணை பார்த்து பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி அவல்பூந்துறை பாகம்பிரியான் உடனமர் புவனேஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

 

திருமணத்தின் போது எனது மனைவிக்கு தங்கத் தாலிக் கொடி 15 பவுன், தங்க வளையல் ஒரு ஜோடி, தங்க கம்மல் ஒரு ஜோடி என ஆகமொத்தம் 20 பவுன் தங்க நகைகளை சீதனமாக கொடுத்தேன். மேலும் திருமணச் செலவாக  7 லட்ச ரூபாய் செலவு செய்தேன். திருமணம் முடிந்து இரண்டு மாதம் நன்றாக குடும்ப வாழ்க்கை சென்றது. இந்நிலையில் என் மனைவி செல்போனில் யாருடனோ பேசி வந்தார். நான் இது குறித்து கேட்டபோது என் மனைவி ஏதேதோ கூறி சமாளித்தார். எனக்கு மேலும் சந்தேகம் வரவே எனது மனைவி செல்போன் எண்ணை பார்த்தபோது எனக்கு திருமணம் செய்து வைத்த ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் எனது மனைவி ஆபாசமாகப் பேசியது பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

 

மேலும் அவருடன் என் மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதும் தெரிந்து கொண்டேன். பின்னர் அவர்கள் செல்போனில் பதிவாகி இருக்கும் பதிவுகள் குறித்து  கேட்டபோது எனது மனைவிக்கு ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் ஆகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் என் மனைவி நடத்தை சரியில்லாததால் அவரது முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த உண்மையை மறைத்து தான் அந்த ரியல் எஸ்டேட் அதிபர் எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

இது குறித்து அவரிடம் கேட்டபோது நாங்கள் அப்படித்தான் இருப்போம் என்று எனது மனைவியும் ரியல் எஸ்டேட் அதிபரும் கூறினர். இதற்கு என் மனைவியின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி எனது மனைவி அவரது தாயாருடன் நான் திருமணத்தில் போட்ட தங்க நகைகளோடு சென்றுவிட்டார். பின்னர் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி நான் சக்தி ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு எனது மனைவி, ரியல் எஸ்டேட் அதிபர் இருவரும் வந்து என்னிடம் தகராறு செய்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். நாங்கள் அப்படித்தான் பணம் பறிப்போம் என்றும் கூறிச் சென்றனர். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை மோசடி செய்து நம்ப வைத்து ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர், எனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருமணத்திற்காக நான் கொடுத்த 20 பவுன் தங்க நகைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.