Skip to main content

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பு காரசார விவாதம்! 

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

eps and ops lawyers chennai high court

 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைக்கேட்ட ஓ.பன்னீர்செல்வம் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே. பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றமே கூறிய பின் ஐகோர்ட் என்ன உத்தரவிட முடியும்? உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மனுதாரர் அங்கு தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொதுக்குழுத் தடை தவிர பிற கோரிக்கைகளுக்கு மட்டுமே ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்குழு நடத்தும் உரிமை எந்த விதத்திலும் தடுக்கப்படக் கூடாது. இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் இருந்த கூடுதல் மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தடைக்கோரிய மனு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், மீண்டும் அதே கோரிக்கையை எழுப்ப முடியாது. 

 

காவல்துறை பாதுகாப்பு, விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பது போன்ற கோரிக்கைகள் வைத்தால் ஆராயலாம். கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது" எனத் தெரிவித்தார். 

 

அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்வதற்கு ஒருநாள் முன்பு தான் பொதுக்குழு அழைப்பிதழ் தனக்கு கிடைத்தது என்றனர். 

 

இதற்கு நீதிபதி, கட்சியின் அனைத்து கூட்டங்களுக்கும் முறையாக அழைப்பிதழ் அனுப்பி நடத்தப்படுகிறதா? கடந்த ஜூன் 23- ஆம் தேதி அன்று பொதுக்குழுவின் தொடர்ச்சியாகவே, ஜூலை 11- ஆம் தேதி நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

 

இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற அமைப்பே தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானங்களும் பொதுக்குழு தீர்மானங்களும் முரணாக இருந்தன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்று வாதிட்டனர். 

 

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்து தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதியிடம் முன் வைத்து வருவதால் காரசார விவாதம் நடந்து வருகிறது என்றே கூறலாம்.   

 

சார்ந்த செய்திகள்