
'பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி கைப்பற்ற நினைப்பது பிட் பாக்கெட் அடிப்பதற்கு சமமானது' என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''எம்ஜிஆர் இந்த கட்சி ஆரம்பித்தபோது அவர் வகுத்துக் கொடுத்த விதி எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது. வெற்றி எங்களுக்கு கிட்டும். நிதித்துறையையும், வீட்டு வசதி துறையையும் ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி பழனிசாமி அவராகவே கொடுத்தது. ஆனால் பொதுச்செயலாளர் பதவியை அவர் இப்பொழுது கைப்பற்ற நினைப்பது பிட் பாக்கெட் அடிக்கின்ற திருடனுக்கு சமமானது.
தேர்தல் ஆணையமோ, நீதிமன்றமோ அவர்களுக்கு சின்னத்தையும் கொடுக்கவில்லை. அதிமுக கட்சியும், சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது. நேரம் வரும்போது அலுவலகம் எங்க கைக்கு வரும். அண்ணாமலை அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் டெல்லி தலைமை தான் முடிவு எடுக்கும். அகில இந்திய கட்சியில் தமிழ்நாட்டு தலைமை முடிவெடுக்காது. அது செல்லாது. அதிமுக இதுவரை ஒன்றாக இணைய வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்''என்றார்.