Skip to main content

எடப்பாடி போஸ்டர் மேல் சாணி அடித்த ஓ.பி.எஸ். உறவினர் கைது!!

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
EPS OPS


 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே இருக்கும் கே.எம்.பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் திடீரென எடப்பாடி பேரவை என்ற பெயரில் போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டியிருந்தார். துணை முதல்வரான ஓ.பி.எஸ்.-யின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் திடீரென எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருந்தது மாவட்டத்தில் உள்ள கட்சிக்காரர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



இந்த மாவட்டத்தில் உள்ள கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் எடப்பாடி ஆதரவாளராக உள்ளார். சுவரொட்டி ஒட்டிய நபர் ஜக்கையனின் ஆதரவாளர் என்று கூறப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளரை சந்தித்த ஜக்கையன் எம்.எல்.ஏ. கூறுகையில் சுவரொட்டி ஒட்டிய நபருக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அவர் ஓ.பி.எஸ். தனியாக தர்மயுத்தம் நடத்தியபோது அவருடன் இருந்தவர் என்று தெரிவித்திருந்தார். அரசியல் கட்சிகள் என்றால் சிறு சிறு பிரச்சினைகளும் மனஸ்தாபங்களும் இருக்கத்தான் செய்யும். விரைவில் அது சரி செய்யப்படும். தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். உடன் இணைந்து தான் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இன்று காலை கம்பம் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தின் முன்பாக ஒட்டப்பட்டிருந்த எடப்பாடி பேரவை என்ற சுவரொட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படத்தின் மீதும் தேனி மாவட்டம் எடப்பாடி பேரவை என்ற வாக்கியத்தின் மீதும் போஸ்டர் ஒட்டிய பால்பாண்டி படத்தின் மீதும் நேற்று இரவு மர்ம நபர்கள் சாணியை பூசி சென்றுள்ளனர். இதனால் இன்று காலை அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. 



இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் சிவநேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பரமசிவம் ஓ.பி.எஸ். சமூகத்தைச் சேர்ந்தவராகவும், உறவினராகவும் இருக்கிறாராம். இந்த விசயம் எடப்பாடி வரை தெரிந்ததின் பேரில் தான் காக்கிகளை தூண்டிவிட்டு சிவநேசனை அதிரடி கைது செய்ய சொல்லியிருக்கிறார் என்ற பேச்சு மாவட்ட அளவில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியிலே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!

 

 

சார்ந்த செய்திகள்