எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடிதம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, கொறடா விஜயதாரணி, வசந்தகுமார் ஆகியோர் இன்று தலைமை செயலகத்தில் உள்ள கட்சி அறையில் கூடி விவாதித்தனர். மற்ற எம்.எல்.ஏ.க்கள் வெளியூரில் இருப்பதால் தொலைபேசி மூலம் அவர்களையும் தொடர்பு கொண்டு விவாதித்தனர். பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.
இந்த கடிதம் பற்றி கே.ஆர். ராமசாமி கூறியதாவது:- முதல்வர் எடப்பாடிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்ததுமே இந்த அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது. உடனடியாக சட்டசபையை கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம் என்றார்.