தேர்தல் வரை ஆளுநரை மாற்ற வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் திமுக வழக்குரைஞர் ஏ.என். புருஷோத்தம் மகள் பூர்ணிமா திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி முதன் முதலில் 33 சதவித இட ஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று சொன்னபோது மற்ற எந்த மாநிலமும் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற முன்வரவில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டை முதல் மாநிலமாக நிறைவேற்றியது தமிழகம் தான். அப்போது முதல்வராக கலைஞர் இருந்தார்.
ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தான் திராவிட மாடல். இன்றைக்கு யார் யாரோ பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொண்டு, மாளிகைகளில் உட்கார்ந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்டு கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததே திராவிடம் தான். கடந்த 2 நாட்களாக ஆளுநர் தொடர்ந்து புருடா விட்டு வருகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நான் கேட்டுக்கொள்வது, இங்கு இருக்ககூடிய ஆளுநரை என்றைக்கும் மாற்றிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது அவர் இருக்கட்டும். அவர் இருந்தால் எங்களுக்கு பல சௌகரியம். அவர் சொல்வதை மக்கள் பொருட்படுத்தவில்லை” என பேசினார்.