Skip to main content

பெண் காவலரின் துணிச்சலை பாராட்டி பரிசளித்த டாக்டர்கள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Doctors who appreciated the bravery of the female policeman

 

செல்ஃபோன் பறித்துச் சென்ற ரவுடியை விரட்டிப் பிடித்த கர்ப்பிணி பெண் காவலரின் துணிச்சலையும், கடமை உணர்வையும் பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்கள் சூர்யா மருத்துவமனை டாக்டர்கள். அந்தப் பெண் காவலருக்கு உயரதிகாரிகளின் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

சென்னை பேசின் பாலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் சுசீலா. இவர்  கடந்த 24-ந் தேதி பேசின் பாலம் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது பேருந்தில் இருந்த ஒருவர் தனது மொபைல் ஃபோன்  திருடப்பட்டு விட்டதாகக் கதறினார். இதைப் பார்த்த பெண் காவலர் சுசீலா, பேருந்தில் பயணம் செய்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படி இருந்த இரண்டு  நபர்களைப் பிடித்து விசாரித்தார். அப்போது, பெண் காவலர் சுசீலாவை தள்ளிவிட்டு ஒருவர் தப்பியோடினார்.

 

மற்றொருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெண் காவலர் சுசீலா, பேசின் பாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், சுசீலா நடத்திய விசாரணையில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது புளியந்தோப்பு திருவிக நகரைச் சோ்ந்த 36 வயதுடைய ஜாபா் ஷெரீப்  என்பது தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் இருப்பதும்  தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட ரவுடியை  விரட்டிப் பிடித்த மூன்று மாத கர்ப்பிணியான சுசீலாவின் துணிச்சலை மக்கள் வியந்து பார்த்தனர். இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்தும் தனது கடமையை மறக்காத பெண் காவலர் சுசீலாவின் தைரியத்தை பாராட்டி  1 லட்சம் ரூபாய் பரிசளித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் காவல்துறையின் டெபுடி கமிஷனர், சூர்யா மருத்துவமனையின் டாக்டர்கள் அனந்தகுமார், ராஜீவ் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசளித்து பாராட்டிய டாக்டர் ஸ்ரீகுமார், "உங்களின் துணிச்சல் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்க சக்தி" என்று வாழ்த்தினார். இந்த நிலையில், சுசீலாவை  காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.