திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது மே 29-ஆம் தேதி வரை போலீசார் எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர் புகார் அளித்திருந்தார். சேகரின் புகாரால் கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மீதான நடவடிக்கைக்கு தடை வேண்டும் என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் கருத்துக் கூறவில்லை எனவும் டி.ஆர்.பாலு, தயாநிதி ஆகிய இருவரும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
திமுக எம்,பி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் தங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் இதுகுறித்து காவல்துறை பதில் அளிக்க கோரியும், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் இருவர் மீதும் மே 29-ஆம் தேதி வரை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டு வழக்கு மே 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.