
ஈரோடு அடுத்த ஞானிபாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(36). இவரது மனைவி சங்கீதம்(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சங்கீதத்திற்கும் யுவராஜிற்கும் அவர்களது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து கடந்த 29ம் தேதி வீட்டின் கழிப்பறைக்கு சென்று கதவை தாழிட்டு மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.