தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத்தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது," மறைந்த முதல்வர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இந்த சிலைக்கு காவி சாயமும், விபூதியும் அடிக்க முடியாது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது. திருவள்ளூர் கருத்தை விபூதியால் மறைக்க முடியாது. அனைத்து மதத்தினரின் பொதுவான திருமறையாக திருக்குறள் உள்ளது.
இந்து மதத்திற்கு தி.மு.க விரோதி அல்ல, மகாமகத்தை காண அப்போதே 2 லட்சம் பக்தர்களை சிறப்பாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்தது, பல்வேறு கும்பாபிஷேகங்கள் நடத்தியது, திருவாரூர் தேரை வீதிக்கு இழுத்து காட்டியதும், தி.மு.க தான். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யும் அவலம் இந்த அதிமுக ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதிமுக வளர்ச்சி அடைந்து விட்டது என்றால் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற உறுப்பினரை பெற்ற வெற்றியை விட இடைத்தேர்தல் பெற்ற வெற்றியாக அதிமுக கருதமுடியாது.
தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர். இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு வெற்றிடத்தை லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பதவியை அலங்கரித்தார், பின்னர் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி.
தமிழக அரசியலில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் நிரப்பினர். தற்போது அதிமுக தலைமையில்தான் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிரப்புவார் என்பதை திமுகவினரும் பொதுமக்களும் அறிந்துள்ளனர் என்பதை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்." என்று அவர் பேசினார்.