
கணவனை இழந்த பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பல் மருத்துவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 'கிறிஸ்டல்' என்ற பெயரில் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் நிஷாந்த் ரவிச்சந்திரன். மருத்துவரான நிஷாந்த் ரவிச்சந்திரன் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகார் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த புகாரில்,'சமூகத்தில் பிரபல பல் டாக்டராக அறியப்படும் நிஷாந்த் ரவிச்சந்திரன் எனக்கு மருத்துவர் ஷெரின் என்பவரின் மூலம் அறிமுகமானார். நான் கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதைப் போல் அவரும் அவருடைய மனைவியைப் பிரிந்து வாழ்வதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறிய நிஷாந்த் ரவிச்சந்திரன், என்னிடம் நெருங்கி பழகினார். அதன் பிறகு அவருடைய கிளினிக்கில் வைத்தும், தனியாக வீடு எடுத்து தங்கவைத்தும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டார். இதற்கு பெண் மருத்துவர் ஷெரினும் உடந்தையாக இருந்தார். தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்ததால் அடித்துக் கொடுமைப்படுத்தியதோடு, ஆபாசப் படங்களை வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில புகைப்பட ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே நிஷாந்த் ரவிச்சந்திரன் இதுபோன்று கணவனால் கைவிடப்பட்ட நான்கு பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பல் மருத்துவர் நிஷாந்த், அவரது மருத்துவ தோழி ஷெரின், கார்த்திக் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.