
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உயர் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னையை அடுத்த மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். சென்னை மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் டெங்கு ஒழிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் பேரல்கள், கால்வாய்களை முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உயர் அலுவலர்களுடன் இன்று (12.09.2023) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் செப்டம்பர் 16 ஆம் தேதி மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்கள், மருத்துவத்துறை இணை இயக்குநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.