Skip to main content

டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரப்பிய மருத்துவமனைக்கு 1 இலட்ச அபராதம் விதித்த அதிகாரிகள் ! 

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
sw

 

தமிழகம் முழுவதும் பன்றிகாய்ச்சல், டெங்குகாய்ச்சல் என வைரஸ் காய்ச்சல்கள் மூலம் பொதுமக்கள் பாதிப்படைந்து பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திருச்சியில் பன்றிக்காய்ச்சலில் இதுவரை 3 பேருக்கு மேல் இறந்து உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஊரக மருத்துவ பணிகள் துறையின் சார்பில் அதிரடி சோதனை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்குகாய்ச்சல் மற்றும் பன்றிகாய்ச்சல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. 

 

ஊரக மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் சுவாதி தலைமையில் மருத்துவபணிகள் இணை இயக்குநர் சம்சாத்பேகம், சுகாதாரபணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி, நகர்நல அலுவலர் ஜெகநாதன்,ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். 

 

திருச்சி மாநகரில் சுகாதர நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகரின் பல்வேறு இடங்கள் மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று தடுப்பு நடவடிக்கையை பார்வையிட்டனர். இதே மாதிரி தனியார் மருத்துவமனைகளுக்கும் மருத்துவகுழு ஆய்வு செய்தது. அதன் படி கீதாஞ்சலி மருத்துவனையில் ஆய்வு செய்த போது அங்கு டெங்குகொசு உற்பத்திகாரணிகள் கண்டறியப்பட்டது. மேலும் பன்றிகாய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் மருத்துவகழிவுகளை தரம் பிரிக்காமல் கையாண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக  மருத்துவமனைக்கு 1 இலட்சரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் மாநகராட்சியின் சார்பாக நகர்நல அலுவலர் மூலம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

 

நோயை குணமாக்க மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் மருத்துவமனையே டெங்குகொசு உற்பத்தி காரணிகளை அழிக்காததோடு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த 2ம் தேதி திருச்சி மாநகராட்சியின் சார்பில் அனைத்து மருத்துவமனை பிரதிநிதிகளையும் வரவழைத்து பன்றிக்காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வும் எப்படி மருத்துவமனையை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே அறிவுறுத்தியபடி மருத்துவமனையை வைத்திருக்கிறார்களா என்பதை அறியவே இந்த அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் பன்றி காய்ச்சல் தீவிரம்; உஷார் நிலையில் தமிழகம்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

swine flu in kerala tamil nadu ready to preparedness 

 

பீகார், உத்தராகண்ட், மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இரண்டு பன்றிப்பண்ணைகள் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு  பன்றிப்பண்ணை என மூன்று பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

கேரளாவில் பன்றி இறைச்சிகள் உணவு புழக்கம் அதிகம் என்பதால் அம்மாநில அரசு பன்றிக்கறி விற்பனைக்குத் தடை விதித்ததுடன், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு நோய்கள் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு அங்குள்ள பன்றிகளைக் கொன்று புதைக்கும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பல பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சூழலில் கேரளாவில் பரவி வருகிற ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச்சாவடி அருகே மாவட்டக் கலெக்டர் ஆகாஷ் உத்தரவுப்படி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தலைமையிலான குழுவினர் முகாமிட்டு தமிழகத்திற்குள் வருகிற கேரள மாநிலத்தின் பன்றிகள் மற்றும் அவற்றின் கழிவுகள், பன்றியின் உணவுகள் மற்றும் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.

 

மேலும், பறவைக்காய்ச்சலும் அதிகமாகப் பரவுவதால் வாத்து, கோழி முட்டை, கோழிகள் போன்ற இனங்களை ஏற்றி வரும் வாகனங்களும் கேரளாவுக்குள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மற்ற வாகனங்கள்  தீவிரமாகச் சோதனையிடப்பட்டு கிருமிநாசினி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக - கேரள எல்லையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் 5 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தெரிவிக்கையில், "கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகப் பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிகமான மக்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. எனவே பன்றி பண்ணைகளும் இங்கு குறைவு" என்றார். 

 

 

Next Story

மதுபான கூடம் அடித்து நொறுக்கம்... பொறுத்தது போதுமென பொங்கியெழுந்த பொதுமக்கள்!!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Crushing the bar ... people who got up in a rage!

 

விருதுநகரில் மக்களின் தொடர் போராட்டத்தை மீறி செயல்பட்ட தனியார் மதுபான கூடம் பொதுமக்களாலேயே அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணயாபுரம் அருகே தனியார் மதுபான கூடம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட அன்றிலிருந்தே அப்பகுதி மக்கள் அந்த மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அருகிலேயே பள்ளி மற்றும் கோவில்கள் இருப்பதால் உடனடியாக தனியார் மதுபானக்கூடம் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் எதிர்ப்பை மீறி மதுபான கூடம் செயல்பட்டு வந்தது. இது தொடர்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.

 

Crushing the bar ... people who got up in a rage!

 

Crushing the bar ... people who got up in a rage!

 

இப்படி பல முயற்சிகள் எடுத்தும் அந்த மதுபானக்கூடம் மூடப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த தனியார் மதுபான கூடத்தை செங்கற்களால் அடித்து நொறுக்கினர். 50 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மதுபாட்டில்கள், சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் மண்ணெண்ணெய் கேனுடன் அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்தின் முன் பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தாசில்தார், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு  அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்திற்கு சீல் வைத்தனர்.