குமரி மீனவர்களுக்கு ஆதரவாக பழவேற்காட்டில் ஆர்ப்பாட்டம்
ஒக்கி புயல் தாக்குதலில் குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தேடி கண்டு பிடித்து மீட்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால் மீனவர்களை தேடும் பணியில் போதிய வேகமும், அக்கறையும் இல்லை என்று குமரி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சாலை மறியல், ரெயில் மறியல் என்று தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் சின்னத்துறையில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டு அறிய வேண்டும். அதுவரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்.
குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக இன்று திருவள்ளூரை அடுத்த பழவேற்காடு பகுதியில் 40 கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் சேர்ந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.