
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). இவருக்கும் சினேகா(24) என்வபருக்குகடந்த 10 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. விக்னேஷ் அதே பகுதியில் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் வெள்ளிக்கிழமை(25.4.2025) மாலை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது மனைவி சினேகா விக்னேஷை தூக்கத்தில் இருந்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து சினேகாவின் உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதனால் தீ உடல் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து சினேகா சத்தம் போட்டு அலறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சினேகாவை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சிறு காயமடைந்த கணவர் விக்னேஷ் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூக்கத்தில் இருந்து எழுப்பியதற்காக மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.