Skip to main content

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து! -ஆயுஷ் அமைச்சக ஒப்புதலோடு அரசு பிறப்பித்த ஆணை!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

  corona virus - Homeopathy medicine - Tamilnadu government order

 

கரோனா தொற்றுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


கரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்குப் பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

 

 


இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற இந்த ஹோமியோபதி மருந்தை அனைத்து மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், தொற்று பாதித்தவர்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, பாடியை சேர்ந்த ஜேசய்யா அன்டோ பூவேந்தன் என்ற ஹோமியோபதி மருத்துவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மாநிலங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருந்துக்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தும், அது அமல்படுத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
 

nakkheeran app




இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.வேலுமணியும், அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனும் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்செனிகம் ஆல்பம் – 30 மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை ஏற்று, அதை பயன்படுத்த தமிழக அரசும் அரசாணை பிறப்பித்து, அமல்படுத்தி வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து  உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்