Skip to main content

தபால் நிலையத்திற்கு பூட்டு போடச் சென்ற காங்கிரஸ் கட்சியினர்

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

nn

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்திய அளவில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

 

அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேற்கண்ட நடவடிக்கையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் கைது செய்யும் நடவடிக்கைக்கும் தயாராக இருந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை எஸ்.கே.சி ரோட்டில் காங்கிரசார் ஒன்று திரண்டனர். மாநகர பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் கவுன்சிலருமான ஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா, சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஜாவர் அலி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜிப்பர் அகமது, மாவட்ட தலைவர் மாப்பிள்ளை மீரான், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அல்டிமேட் தினேஷ், சிறுபான்மை பிரிவு பாட்ஷா, முகமது யூசுப், கனகராஜ், விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சூரம்பட்டி நான்கு ரோட்டிற்கு கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர். அப்போது சூரம்பட்டி போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி தடையை மீறி பூட்டு போடும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். இதனால் காங்கிரசார் மேற்கொண்டு செல்லாமல் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.