
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை அடைந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள அதிமுக தலைமை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்து வருகிறது. அதேபோல் சசிகலாவை வரவேற்று பேனர், போஸ்டர்கள் வைத்த 2 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 'சசிகலா தலைமையில் அதிமுக மீட்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது' என அமமுகவின் நாளேடான ‘நமது எம்ஜிஆர்’ கருத்து தெரிவித்துள்ளது. 'எத்தனை செய்ய தீய சக்திகளோடு சேர்ந்து துரோக கூட்டங்கள் நடத்தினாலும், அவை அனைத்தும் புஸ்வாணமாகிவிடும். சிம்மாசனத்தில் அமரவைத்தவருக்கு காட்டும் விசுவாசம் இதுதானா? பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவோருக்கு நாவடக்கம் வேண்டும் ' எனவும் ‘நமது எம்ஜிஆர்’ நாளேடு கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல் 'தனியாக நின்று டெபாசிட் வாங்கக்கூட முடியாதவர்கள்' என்று பாஜகவையும் மறைமுகமாக விமர்சித்துள்ளது நமது எம்ஜிஆர்.
இந்நிலையில் ‘நமது எம்ஜிஆர்’ நாளேட்டின் விமர்சனத்திற்கு, அதிமுக - அமமுக இணைப்புக்கோ அல்லது சசிகலாவை சேர்க்கவோ வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தற்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக என்பது எஃகு கோட்டை என்பதால் யாராலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என மெரினாவில் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தற்போது தெரிவித்துள்ளார்.