Skip to main content

இரு சமூகத்தினரிடையே மோதல்; போலீஸ் விசாரணை! 

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

conflict between two communities; Police investigation!

 

கிருஷ்ணகிரி  மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் கிராமத்தில் பலதரப்பு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், பட்டியலினத்து மக்கள் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்களை எப்போதும் சமூக ரீதியாக அழுத்தி வைப்பதும், கிராமத்தில் டீ கடையில் இரட்டைக் குவளை முறையைக் கடைப்பிடிப்பதும், கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும் நடந்து வருகிறது. இவையெல்லாம், கோட்டையூர் பட்டியலினத்து மக்கள் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு பிறகே வெளியில் தெரிய வந்துள்ளது. 

 

குறிப்பாக, அங்கு உள்ள பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விருப்பப்படியே பட்டியலின மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கோட்டையூர் கிராமத்தின் நடைமுறை. கோட்டையூர் கிராமத்தில் அம்பேத்கர் படங்களையோ அல்லது பட்டியலினத்து தலைவர்களுடைய படங்களையோ போட்டு பேனர் வைத்தால் அதை அகற்றச் சொல்லியும் தகராறில் ஈடுபடுவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி ஜின்மநத்தம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பட்டியலின இளைஞர்கள் அருண்குமார், முத்துராஜ் ஆகியோர் தேரின் வடக்கயிற்றைப் பிடித்துள்ளனர். அப்போது, பெரும்பான்மை சமூகப் பிரிவைச் சேர்ந்த நபர்கள் அந்த இளைஞர்களிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு நடந்ததை அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த மரலிங்கா என்ற நபரிடம் தகவலைச் சொல்லியுள்ளனர்.

 

இதன்பிறகு வாய் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி மரலிங்கா, இளைஞர்களை அழைத்து வந்துள்ளார். ஆனாலும், ஆத்திரம் தீராத பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமார், மோகன், அருண், ஐயனார், ராவேந்திரன், பிரபு ஆகியோர் பட்டியலின மக்கள் இருக்கும் தெருவிற்குச் சென்று மரலிங்காவிடம் தகராறு செய்துள்ளனர். இந்தத் தகராறில், மேற்கண்ட இளைஞர்கள், மரலிங்காவின் கையை கத்தியால் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இத்தகவலை ஊர் முக்கியஸ்தரிடம் புகார் தெரிவித்து நியாயம் கேட்க, பட்டியலின இளைஞர்கள், பெண்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் பெரும்பான்மை சமூகத்தினர் இருக்கும் தெருவிற்குச் சென்றுள்ளனர். அப்போது பட்டியலின மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

தாக்குதலில் 6 ஆண்கள் 3 பெண்கள் உட்பட 9 பேருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு இரண்டு கைகள், இரண்டு கால்களையும் வெட்டி உள்ளனர். நான்கு இளைஞர்களுக்கு கடுமையான வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. மூன்று பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்டியலின மக்கள் காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது, நீங்கள் ஏன் அந்த தெருவிற்குச் சென்றீர்கள் என்று கூறி  பட்டியலின மக்கள்  ஏழு பேர் மீது பிரிவு 307ன் கீழ் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகளும், முற்போக்கு அமைப்புகளும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அந்த பெரும்பான்மையினர் மூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

இது குறித்து பேசிய மக்கள் அதிகாரம் கிருஷ்ணகிரி மண்டல குழு உறுப்பினர், “காவல்துறையும், நிர்வாகமும் ஒரு சார்பாக எப்போதும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மறுபக்கத்தில் தொடர்ந்து சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் சிவக்குமார் போன்றோர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.  நீதிமன்றம் பிணை வழங்கக்கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் இரட்டை டம்ளர் முறை குறித்த ஆய்வு செய்து, இரட்டை டம்ளர் வழங்கும் டீக்கடை, ஓட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.