கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட உத்தரவிடக்கோரி பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் . இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி டெல்டாவில் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி 26 டிஎம்சி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த தண்ணீர் குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறுவை நெற்பயிர்கள் முதிர்ச்சியடைந்து அதிக மகசூல் பெற இன்னும் 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படும். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் ஏற்கனவே ஜூலை 5 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம் கொடுத்திருக்கிறார். உச்சநீதிமன்றம் விதித்த நீர் விநியோக அட்டவணையைக் கடைபிடிக்க மத்திய அரசு கர்நாடக அரசிடம் அறிவுறுத்த வேண்டும். இதனை முழுவதுமாக கண்காணிக்கக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்த வேண்டும். தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.