Skip to main content

‘ரயில் விபத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்’ - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 11/10/2024 | Edited on 11/10/2024
CM MK Stalin says I was shocked to know about the train accident

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் (ரயில் எண் : 12578) இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து இன்று (11.10.2024) இரவு 07.44 மணியளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. அதோடு பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உள்ளிட்ட 6 தடம் புரண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், மீட்புக்குழுவினர் ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேசமயம் கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பயணிகள் விரைவு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளன. இந்த ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் 30 பேர் ரயில் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

CM MK Stalin says I was shocked to know about the train accident

அதே சமயம் தவறான சிக்னல் காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ரயில் விபத்து தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே உதவி தேவைப்படுவோர் 044- 2535 4151, 044 - 2435 4995, 044 - 25330952, 044 - 2533 0953 இந்த எண்களைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதோடு ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து பயணிகள், மின்சார ரயிலில் சென்னை சென்ட்ரலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தர்பங்கா செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. எனவே தர்பங்கா செல்லும் பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த ரயில் விபத்தால் சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் திருச்சி - ஹவுரா, எர்ணாகுளம் - டாடாநகர், காக்கிநாடா -தன்பாத் உள்ளிட்ட விரைவு ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்புப் பணிக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.

CM MK Stalin says I was shocked to know about the train accident

மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ரயில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். 

சார்ந்த செய்திகள்