Skip to main content

கே.வி பள்ளியில் மாணவருக்கு பாலியல் தொல்லை; கண்டுகொள்ளாத காவல்துறை 

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

chennai mgr nagar KV school Student incident
மாணவரின் தந்தை பவுல்ராஜ்

 

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் பவுல்ராஜ் என்பவருடைய 15 வயது மகன் அதே பகுதியில் உள்ள கே. வி பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்,  அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் அவரை பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். மேலும் இதைப்பற்றி உன் வீட்டில் சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன் எனவும் அந்த மாணவரை மிரட்டியுள்ளனர்.

 

அந்த மாணவன் இதைப்பற்றி ஆசிரியரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவருக்குத் தொந்தரவு தந்த மாணவர்கள், எங்களைப் பற்றியே ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுக்கிறாயா என நிர்வாணப்படுத்தி முட்டி போட வைத்து ஆபாசப் படத்தைக் காட்டி தகாத வார்த்தைகளால் திட்டியும், ஆண் உறுப்பு மீதும் அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில், 23 ஆம் தேதி கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை பவுல்ராஜ் கே.கே நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறை பள்ளி மீதும் அந்த மாணவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதே சமயம் பாதிக்கப்பட்ட இவர்களிடம் எந்த ஊடகத்திடமும் பேச வேண்டாம் எனவும் மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரையிலும் ஒரு சி.எஸ்.ஆர் கூட போடவில்லை. ஆனால் அதைப்பற்றி கேட்டால் விசாரணை செய்கிறோம் எனச் சொல்கிறார்கள் என பவுல்ராஜ் குற்றம் சாட்டுகிறார்.  

 

இதுகுறித்து விவரம் அறிய பள்ளி தரப்பையும் காவல்துறை தரப்பையும் அணுகியபோது அவர்கள் பேச மறுத்துவிட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் மாணவர்களுக்குத் துணையாக அப்பள்ளியின்  விளையாட்டு ஆசிரியர் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த சமத்துவம் குறித்து நாம் விசாரித்த போது பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது என அப்பகுதியில் இருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்