Skip to main content

பொது இடங்களில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அரசு காப்பகங்களில் சேர்க்க வேண்டும்! – நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு! 

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

chennai high court

 

தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றித் திரிபவர்களைக் கண்டறிந்து, அரசு காப்பகங்களில் அவர்களைச் சேர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில்,  தற்போது பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றி வருகின்றனர். அதில் பலருக்கு கரோனா தொற்று உள்ளது. ஆனால், அவர்களுக்குப் போதிய உணவும் தங்குமிடமும் இல்லை. தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

 

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டிப் பேசினார். குறிப்பாக, பழனி மலையைச் சுற்றி பல்வேறு மனநலம் பாதித்தவர்கள் சுற்றித் திரிவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு,  தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவேண்டும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து, அந்தப் பகுதியில் உள்ள மனநலம் பாதித்தவர்களைக் கண்டறிந்து, அவர்களை அரசுக் காப்பகத்தில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை,  வருகிற 18-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்