
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என பாஜக பிரமுகர் மிரட்டியதற்கு எதிரான வழக்கில், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்துள்ள மனுவில், அகில இந்திய ஹிந்து மகா சபா மற்றும் ஹிந்து தேசம் என்ற பத்திரிகையை ஶ்ரீகண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்து மகா சபா அமைப்பில் உறுப்பினராக உள்ள பெண் ஒருவர், ஶ்ரீகண்டன் மீது கொடுத்த பாலியல் புகாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜனவரி 20 -ம் தேதி அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், பி.ஜே.பி. யைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், முகநூல் மூலமாக ஶ்ரீகண்டனின் திருமண புகைப்படத்தையும், குறுஞ்செய்தியையும் எனக்கு அனுப்பி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதன் பின்னணியில், பாலியல் புகார் அளித்த பெண் இணைந்து செயல்படுவதாகத் தெரிகிறது. ஒரு வழக்கறிஞராக ஶ்ரீகண்டன் வழக்கில் ஆஜராவதால், தனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். எனக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, காவல்துறை ஆணையருக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய பாதுகாப்பு வழங்கவும், காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதீமன்ற நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, சம்மந்தப்பட்ட பாலியல் புகார் தெரிவித்த பெண் மற்றும் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.