Skip to main content

மாற்று நபர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாமா?- அமமுக பதிவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என புகழேந்தி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன், அக்கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அக்கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி அ.ம.மு.கவை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

chennai high court ammk party registration india election commission

அவர் தன் மனுவில், தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியைப் பதிவு செய்ய  அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில், தான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, தான் உட்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரும் அ.ம.மு.கவில் இருந்து விலகி விட்டதால், கட்சியைப் பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 

இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி அ.ம.மு.கவை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதாகவும், அந்த மனு மீது அக்டோபர் 24- ஆம் தேதி விசாரணை நடத்தியதாகவும், பின்னர் அவர் மனு  நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 25- ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியாக அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

chennai high court ammk party registration india election commission

புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.ம.மு.க வை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் தான் அளித்த புகார் குறித்து எந்த கோப்புகளிலும் குறிப்பிடப்படவில்லை எனவும், விதிகளின்படி தேர்தல் ஆணையம் தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க உரிய வாய்ப்பை வழங்காததாலும், கட்சியில் இருந்து விலகியவர்களின் பிரமாண பத்திரத்தையும் பரிசீலனைக்கு எடுத்து, அ.ம.மு.கவை அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது எனவும் வாதிட்டார்.


இதனைத் தொடர்ந்து, ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கு அக்கட்சியின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள், அக்கட்சியில் இருந்து பின்னர் விலகி விட்டால், அவர்கள் அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மாற்று நபர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாமா என தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அ.ம.மு.கவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்தது தொடர்பாக அனைத்து கோப்புகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


 

சார்ந்த செய்திகள்