Skip to main content

பேருந்து நடத்துநர் உயிரிழப்பு; குடிபோதையில் இருந்த பயணி கைது!

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
Chennai city bus 46G conductor incident

சென்னையில் உள்ள மகாகவி பாரதி நகர் - கோயம்பேடு பேருந்து நிலையம் இடையே மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 46ஜி (46G) வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் 46ஜி பேருந்து ஒன்று அண்ணா ஆர்ச் அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஜெகன் என்பவர் நடத்துநராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் இருந்த பயணி கோவிந்தன் (வயது 65) என்பவருக்கும் நடத்துநர் ஜெகனுக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால்  தகராறு ஏற்பட்டுள்ளது.

இது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கீழே விழுந்ததில் நடத்துநர் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார் நடத்துநர் ஜெகனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயணிக்கும் காயம் ஏற்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதே சமயம் இந்த சம்பவத்தைக் கண்டித்து மற்ற மாநகர பேருந்துகள் இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநகர பேருந்தில் டிக்கெட் எடுக்கும்போது நடத்துநருக்கும், போதையில் இருந்த பயணிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்த நடத்துநர் உயிரிழந்த சம்பவம் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நடத்துநருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்