
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கர்ப்பிணி பெண் ஒருவர் 86 நாளாக கணவரின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வேலக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். மோகன்ராஜ் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது பவித்ரா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் திருமணத்திற்குப் பிறகு ஐந்து மாதம் கழித்து சொந்த ஊரான வேலக்கவுண்டனூருக்கு சென்ற மோகன்ராஜ், காதல் மனைவியான பவித்ராவின் அழைப்புகளைத் தவிர்த்து வந்துள்ளார்.
காதல் கணவனிடம் தன்னைச் சேர்த்து வைக்கும்படி மோகன்ராஜின் வீட்டுக்கே சென்றுள்ளார் பவித்ரா. ஆனால் மோகன்ராஜின் பெற்றோர் கர்ப்பிணி பெண்ணான பவித்ராவை விரட்டியடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பவித்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஆஜரான மோகன்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த மோகன்ராஜ், வேலக்கவுண்டனூரில் உள்ள வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் மொத்தமாக வெளியேறிவிட்டார். தன்னைக் காதல் கணவருடன் சேர்த்து வைக்கும்படி பவித்ரா அவருடைய குடும்பத்துடன் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மோகன்ராஜ் வீட்டிற்கு முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.