Skip to main content

‘இரு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் 

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Chance of heavy rain in two districts says Meteorological Department

 

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்ட இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அரபிக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. தேஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தொடர்ந்து திவீர புயலாகவும், அதனை தொடர்ந்து மிக தீவிர புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் - ஏமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்ல கூடும்.

 

வங்கக் கடல் பகுதியை பொறுத்த வரையில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வருகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையிலும், பின்னர் வட கிழக்கு திசையிலும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக் கூடும். மீனவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி வரையில் அரபிக் கடல் பகுதிகளுக்கும், அக்டோபர் 26 ஆம் தேதி வரையில் வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

அடுத்த மூன்று நாட்களைப் பொறுத்த வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கனமழையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்” என தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்