Skip to main content

இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Chance of heavy rain today Meteorological Department warning

 

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று (26.11.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நாளை (27.11.2023) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நாளை உருவாகும் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும். இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதே சமயம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நாளை மறுநாளுக்குள் (28.11.2023) கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்