தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆகிய 18 மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
9 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 9 ஆம் தேதி முதல் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 9ம் தேதி முதல் பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும்.
மேலும், இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் அல்லது பருவமழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.