Skip to main content

மாணவிகளிடம் சாதிய பாகுபாடு... அரசு கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Caste discrimination among female students... Govt college principal suspend

 

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

நாமக்கல்லில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயரில் அரசு மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வரான பால் கிரேஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த பால் கிரேஸ், அங்கு அவர் மெத்தனமாக செயல்பட்டதாகவும், ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்து அது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

 

அதன் பின்னர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பால் கிரேஸ், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இங்கும் பணியாளர்கள், மாணவிகளை மரியாதைக் குறைவாக பேசியதாக அவர் மீது பல்வேறு புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் மீது கல்லூரியில் இருந்து அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கியதாகவும், மாணவிகளிடம் சாதிய பாகுபாடு கட்டியதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்