Skip to main content

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் பலி! 

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

 car-truck collision near Veppur two passes away

 

மதுரை இந்தியன் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ராஜா முகமது(33). இவரது மாமனார் தனசேகர்(60), அவரது மனைவி கலைச்செல்வி(55). தனசேகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அதையடுத்து அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி மதுரையில் இருந்து நேற்று காலை அவர்களது சொந்த காரில் ராஜா முகமது, தனசேகர், கலைச்செல்வி ஆகியோர் சென்றனர். காரை ராஜா முகமது ஓட்டினார்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் காரின் முன்பக்க டயர் வெடித்து. இதனால், கார் தாறுமாறாக ஓடியது. முன்னால் சென்ற பைக் மீது கார் மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ராஜா முகமது, இடது பக்கமாகக் காரை திருப்ப, அதேநேரத்தில் தூத்துக்குடியில் சரக்குகளை இறக்கிவிட்டு சென்னை நோக்கிச் சென்ற லாரியின் பின்னால், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

 

இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. காரை ஓட்டிச்சென்ற ராஜா முகமது, தனசேகர் மனைவி கலைச்செல்வி ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தனசேகர் படுகாயமடைந்தார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ராஜா முகமது, கலைச்செல்வி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்